வியாழன், 6 அக்டோபர், 2016

குருசாமி

                                                                            1


என்ன விஷயம் ! கிட்டத்தட்ட ஒரு மணி நேரமா பேசிக்கிண்டு இருக்கீங்க.. யாரோட..."

என்று நான் செல்லில் பேசிக்கொண்டே இருப்பதற்கு  144 போட்டாள் என் மனைவி.

சற்றே பொறு. என்று சைகை காட்டி விட்டு, நண்பருடன் பேச்சைத் தொடர்ந்தேன். எனது தஞ்சை நண்பர். இன்றல்ல, நேற்றல்ல, ஒரு அம்பது வருஷங்களுக்கும் மேலாக, ... எப்பவாவது ஒரு தரம் தான் பேசுவோம். இன்று அவராக பேசுகிறார். சென்னைக்கு வந்து இருக்கிறாராம்.

எல்லாம் பேசி முடித்தபின்னே,

"சரி. போயிட்டு வாங்க.. பத்திரமா திரும்பி வந்து எனக்கு போன் போட்டு சொல்லுங்க.. அப்படியே ஐயப்பன் சாமி பிரசாதம் எனக்கு அனுப்பி வையுங்க.." என்றேன்.. 

"கண்டிப்பா...உனக்கில்லாமையா ..! "

என்று சொல்லி அந்த குருசாமி நண்பர் செல் பேச்சை முடித்தார்.

யாருங்க..என்று திரும்ப தொடர்ந்தாள் தர்ம பத்னி.

என் பிரண்ட் கே.ஜி.கே. தெரியும் இல்லையா உனக்கு ?

"ஆமாம்.   வருசா வருஷம் ராதா கல்யாண நிகழ்ச்சி லே பிரமாதமா பாடுவாரே ...."

"அவரேதான்."

"இந்த வயசுலேயும் புன்னை நல்லூர் மாரியம்மன் கோவிலுக்கு வருசா வருஷம் பால் குடம் எடுத்துண்டு பக்தர்களோட 12 கிலோ நடக்கிறாரே ...?'

"அவரேதான்..."

"எனக்குத் தெரிஞ்சு, 1970 லெந்து அவர் சபரி மலைக்கு மாலை போட்டுண்டு போறாரே ..."



"அவரேதான்..அவரேதான்...இப்ப அவர் குருசாமி ஆகியே 20 வருஷம் ஆகியிருக்கும் . இந்த வருசமும் அடுத்த வாரம் இருமுடி கட்டிண்டு கிளம்புகிறாராம்.

" ரிடையர் ஆகி கிட்டத்தட்ட 20 வருஷம் ஆகி இருக்குமே "

"ஆமா ...97 லே ரிடையர் ஆனார் . இப்ப 79 இல்லேன்னா 80 கூட ஆகியிருக்கும். "

"பின்னே எப்படி . எரிமலை லெந்து நடந்து போவேண்டாமோ ?'

"போறாரே ! அதான் அவரோட வில் பவர். "

எல்லாம் அந்த அய்யப்ப சாமி கொடுக்கிறது.."
"

"அவன் அருளாலே அவன் தாள் வணங்கி ..." அப்படின்னு தேவாரம் சொல்றதில்லையா ?" என்று எனது சமய இலக்கிய அறிவை சுட்டிக்காட்டு முன்னே...

"போதும். போதும். உங்க பெருமை எல்லாம் எங்க கிட்டே காட்ட வேண்டாம்.  இலை போட்டு நேரமாகி விட்டது. சாப்பிட்டு விட்டு..."

எதற்கு இழுக்கிறாள் என்று தெரியும்.  சாயந்திரம்  POTHYS  க்கு பக்கத்திலே போகணும் என்று சொல்லி இருக்கிறாள்.

கை கழுத்தில் இருக்கும் பவள மாலையை சுட்டி காட்டுகிறது.

பவளம் முத்து எல்லாம் அந்த மாலை லே நாளாவட்டத்தில் தேஞ்சு போயிடுத்தாம்.  புதுசா போட்டுண்டா அம்சமா இருக்குமே அப்படின்னு  கீழ் பிளோர் மாமி சொல்றாள் என்று கிசு கிசுத்தது நினைவுக்கு வந்தது.

*******************************************************************************
                                                                     2
செல் வைப்ரேட்டர் சத்தம் கேட்க, எடுத்துப் பார்த்தேன்.

ஆஹா.. எனது நண்பர் வானவில்லார் ன் மெசேஜ் அனுப்பி இருக்கிறார்.

என்ன வென்று பார்த்தேன்:

"எதோ இவரது ஒரு புத்தகம் அச்சில் இருந்து வெளி வருகிறதாம். முதல் பிரதி முக்கியமாக சிலருக்கு அனுப்ப வேண்டும் என்று இருக்கிறேன்.  உங்கள் விலாசத்தை எஸ்.எம்.எஸ். அனுப்புங்கள் என்று இருந்தது.

"நான் எழுதிய பதிவை,  நானும் பார்க்கிறேன். பத்து நாள் ஆகி விட்டது. அத்தனை பேர் படித்து கமெண்ட் போட்டு இருக்கிறார்கள். இவர் மட்டும் படிக்கவில்லை கமெண்ட் போடவில்லை. என்ன நியாயம் ? "

  என்று மைண்ட் வாய்ஸ் சொல்ல,
நானும் அவருக்கு ஒரு பதில் மெசேஜ் அனுப்பினேன்.

"நீங்கள் என் பதிவுக்கு கமெண்ட் போடுங்கள். நான் உங்களுக்கு
விலாசம் அனுப்புகிறேன். " என்று மெசேஜிட்டேன்.  எனது நண்பர் எனது மெசேஜை ஸ்போர்ட்டிவ் ஆக எடுத்துக்கொள்வார் என்று  நூற்றுக்கு நூறு நிச்சயம் என தெரிந்துதான் . அட் லிஸ்ட் பொருட்படுத்த மாட்டார்.  இது சுப்பு தாத்தாவின் கோமாளித்தனம் என்று நினைத்துக் கொள்வார்.

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
                                                                        3
இரண்டு நிகழ்ச்சிகளும் கடந்து போன வை என்று தான் சொல்ல வேண்டும். நான் மறந்தே போய் விட்டேன்.

 சென்ற 18ம் தேதி வரை.

மதியம்  ஒரு மணி. லன்ச் முடிந்து விட்டது.  வேலை எதுவும் இல்லை.
கொஞ்சம் அசதி யாக இருந்ததால் படுத்தேன். கண் அசத்தியது..தூக்கம் வருவதற்கான யுக்தி ஆக,
கைகளில் கிடைத்த அந்த ஹிந்து  பேப்பரைப் பிரித்தேன்.
பேப்பர் கைகளில் விரிந்தபோது !!
கண்களில் முதலில் பட்டது அந்த பெயரும் படமும் தான்.

OBITUARY 
என்ற தலைப்பின் கீழே 
எனது அருமை நண்பர் திரு கே.ஜி. கே என்று அழைக்கப்படும் 
திரு கோபாலகிருஷ்ணன் அவர்கள் மலைக்குச் செல்லும்போது எடுத்த புகைப்படமும் 
அவர் மறைந்த செய்தியும் அவரது குடும்பத்தார் இரங்கல் 


திடுக்கிட்டு போனேன்.
என்ன ?  எப்படி ?
மலைக்கு போனவர் அல்லவா?

சம்பிரதாயமாக தஞ்சை அவர் வீட்டுக்கு லேண்ட் லைன் ல் கூப்பிட்டேன். யாரும் எடுக்கவில்லை. செல் யாரிடம் இருக்கும் ?
கூப்பிடுவோம் என்று செல் போட்டேன்.
அந்தப் பக்கம் எடுத்தது அவரது மகன் என்று தெரிந்தது.

என்னை நன்காகவே அடையாளம் கொண்டார். எனது அப்பாவின் நண்பர் அல்லவா நீங்கள் ! என்று சொல்லி நடந்த துக்க செய்தியை தெரிவித்தார்.

நன்றாக இருந்தவர் !! எப்படி ?
நான் கேட்டு முடியுமுன் அவர்  விம்மும்  சத்தம் என் மனதை அழுத்தியது. கண்களை நிறைத்தது.
மேற்கொண்டு விவரம் கேட்கும் நிலையில் அந்தப் பக்கம் இருந்தவர் இல்லை எனப் புரிந்தேன்.

காட் ப்ளஸ் யூ ஆல் என்று சொல்லி முடித்தேன்.

என்ன தான் இருந்தாலும் எப்படி இருந்திருப்பார் ? நல்ல திடகாத்திரமாகத் தானே இருந்தார் இந்த வயதிலும் ? என்று மனம் எண்ணிக்கொண்டே இருந்தது.

தஞ்சைக்கு வந்தபோது அவர் தான் எனது அறை நண்பர். துணிகளை மடித்து எப்படி சுத்தமாக வைத்துக்கொள்ளவேண்டும் , பல் தேய்த்த பின்பு, பேஸ்டை எப்படி மூடி வைக்கவேண்டும், என்பதில் இருந்து, நாங்கள் அந்தக் காலத்தில் படித்துக்கொண்டு இருந்த ப்ரோபாஷனல் பரீட்சைக்கு நேரத்திற்கு காலம் தப்பாமல் படிக்கச் சொல்லிக்கொடுத்தவர் அவர் தான். சிறந்த டென்னிஸ், காரம் போர்டு பிளேயர்.  வாழ்க்கையின் எல்லா நிலைகளிலும் ஒரு ஒழுங்கினைக் கடைப்பிடிக்கவேண்டும் என்ற ஒரு பாடம் அவரிடம் நான் கற்ற ஒன்றாகும். 

மதியத்திற்குப் பிறகு எனது ஆத்மார்த்த நண்பர் தஞ்சையைச் சேர்ந்த திருவேங்கடசாமி அவர்களுக்கு செல் அடித்தேன். என்ன விஷயம் என்பதற்குள் அவரே

நம்ம கேஜிகே இல்லைப்பா .. என்று ஆரம்பித்தார்.

தமது பக்தர் குழாத்துடன் எரிமலை யில் நடக்கும்போது திடீர் என்று உட்கார்ந்து விட்டாராம்.  என்னவோ செய்கிறது. என்னவென்று புரியவில்லை என்றாராம்.
ayyappa deotees from erimala to pampa க்கான பட முடிவு
From Erimala to Pampa Trekking



நண்பர்களும் அவருக்கு நீர் , மோர் கொடுத்து சில நிமிடங்கள் ஒய்வு எடுத்துக் கொள்ளச் சொன்னார்களாம்.

சில நிமிடங்களுக்குப் பின் , அவரே,  எல்லாம் நன்றாகத்தான் இருக்கிறேன் என்று சொல்லி எழுந்து திரும்பவும் நடக்கத் துவங்கினாராம்.

ஒரு சில வினாடிகளில் அவர் உடல் தொய்ய கீழே விழ , கூட வந்த பக்தர்கள் அவரை தூக்கிக்கொண்டு பக்கத்திலேயே இருந்த சபரிமலை தேவஸ்தானம் நடத்தும் மருத்துவ விடுதி  சென்று இருக்கிறார்கள்.

அங்கே அவரை பரிசோதித்த மருத்துவர்கள் , அவர் இறந்து போய் விட்டார் என்று சொல்லி BROUGHT DEAD என்று சொல்லி விட்டார்கள்.

எப்படி ஒரு இறப்பு !! என்று வியக்காமல் இருக்க இயலவில்லை.

சாஸ்தாவை வணங்கச் சென்றவரை சாஸ்தாவே வந்து அழைத்துக்கொண்டு போன கதை.

மனம் பலவிதமாக யோசித்தது.

அநாயாசேன மரணம்

 என்பார்கள். எந்த ஒரு வலியும் இல்லாத ஒரு இறப்பு ! கொடுத்து வைத்தவர் !



த்ரியம் பகம் யஜாமஹே சுகந்திம் புஷ்டி வர்தனம்
உருவாரகம் இவ பந்தனாத் முக்ஷ்யோ முக்தி இவ மாம்ருதாத்.

என்று சொல்வது திரியம்பக மந்திரம்.

உயிர் உடலை விட்டு பிரியும்போது விளாம்பழ ஓடு பழத்தைவிட்டு பிரியும் வகையில், முழுமையாக, சட் என்று விலக வேண்டும் என்று அந்த திரியம்பகனான சிவபெருமானை வணங்கித் துதிக்கும் வரம் வேண்டிடும் ருத்ரத்தில் வரும் பதிகம்.

எப்படி எல்லாமோ மனம் அவரை மறுபடி மறுபடி அவர் வாழ்ந்த இறை வாழ்வினை நினைந்து கொண்டு இருந்தது.


கண் அசந்து விட்டேன்.

****************************************************************************
                                                                      4
காலிங் பெல் அடித்தது.

எழுந்து போய் கதவைத் திறந்தேன்.

கூரியர் ஒரு பார்சலை நீட்டினார்.

கையெழுத்து போட்டு சரிபார்த்த பின் தந்தார்.

யார் அனுப்பியது ? என்ன புத்தகம் !!

ஆஹா !

நமது நண்பர் மோகன்ஜி அல்லவா அனுப்பியிருக்கிறார் !!

அவர் அனுப்பிய மெசேஜ் நினைவுக்கு வந்தது.
எப்படியோ என் விலாசம் தெரிந்து கொண்டு அனுப்பியிருக்கிறார்.

மனசார அவருக்கு ஒரு நன்றி தெரிவித்தேன்.

என்ன புத்தகமாக இருக்கும் ?

பிரித்துப் பார்த்தேன்.

தொகுத்தவர் பெயர் : 
மோகன்ஜி குருசாமி. 

புத்தக தலைப்பு. 

சாஸ்தா கானாம்ருதம். 

புத்தகத்தில் சில பாடல்களைப்  படித்தேன். 
சில பாடல்களை பாடினேன். 

மற்றும் சில பாடல்களின் வரிகளில் 
லயித்தேன். 

அந்த சாஸ்தாவே வந்தது போல் இருந்தது 





கே.ஜி.கே சொல்லிய வார்த்தைகள் நினைவுக்கு வருவதை சொல்லாமல் இருக்க முடியாது.




"சரி. போயிட்டு வாங்க.. பத்திரமா திரும்பி வந்து எனக்கு போன் போட்டு சொல்லுங்க.. அப்படியே ஐயப்பன் சாமி பிரசாதம் எனக்கு அனுப்பி வையுங்க.." என்றேன்.. 

"கண்டிப்பா...உனக்கில்லாமையா ..! "


அந்த குருசாமி  சொன்னாரா ! 
சொல்ல 
இந்த குருசாமி செஞ்சாரா !!


சாமியே சரணம் ஐயப்பா 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக