வியாழன், 10 டிசம்பர், 2015

நடந்தது, நடப்பது, நடக்கப்போவது





நீரஜ தள நயனா ஹரே கிருஷ்ணா !!

என்று சத்த்தமாக கத்தினேன்.  தூக்கத்திலும் இந்த மனுஷன் நயன்தாரா பத்திலே நினைச்சுட்டு இருக்காரு என்று வூட்டுக்கிழவி முனமுனக்கும் நேரத்தில்,

தூக்கத்தில் எதற்காக கத்துகிறாய் ? அதான் பி.எஸ். என். எல். பிராட் பாண்ட் கனெக்சன் தந்து விட்டேனே !!  லாண்ட் லைனும் இன்னும் இரண்டு நாளில் வரும் பொறு.
என்றார் கிருஷ்ண பகவான்.

 பகவானே ! சிங்கார சென்னை பிச்சைக்கார சென்னையாக மாறி விட்டதே !!  நாலு மாடி கட்டட  அபார்ட்மெண்ட் லே இருந்தவங்க  எல்லாம் இன்னிக்கு  நல்ல குடி நீருக்கு தவிப்பதைப் பார்க்கவில்லையா ?



 அப்படி என்ன தலை முழுகிப்போய் விட்டது என்று கத்துகிறாய் !
இங்கு பார்.
ஆரவாரம் ஏதுமில்லாமல் பணி புரியும் ஒரு நிகழ்வு பற்றிய செய்தி இங்கே.    ( கிளிக்கவும் )
நல்லவர்கள் நாலு பேர் இருக்கத்தான் செய்கிறார்கள் . அவர்கள் செய்யும் உதவியைப் பார்.  (கிளிக்கவும் )
சேவாலய அமைப்பின் கருணை உள்ளம். கிராமம் கிராமமாக சென்று உதவி. 

அது சரி. ஆனால், இப்படி என்ன குற்றம் இழைத்து விட்டோம் நாங்கள் !! சென்னையை வெள்ளக்காடாய் ஆக்கிவிட்டாய் ?

என்ன குற்றம் என்றா கேட்கிறாய் ? (சொடுக்கவும்)
அழ அழச் சொல்லுவார் தமர் என்ற குறள் உமக்குத் தெரியாதோ ?

அல்லது 

எதிரதாக் காக்கும் அறிவினார்க்கு இல்லை
அதிர வருவதோர் நோய்.

என்பது எனக்கு மட்டும் தான் இன்று நினைவு இருக்கிறதோ ?

கண்ணனின் குரலில் ஆத்திரம் தெரிந்தது. சமாளித்துக்கொண்டு, .

புரியவில்லை.கண்ணா. !!!
என்றேன்.
வருமுன் காவாதான் வாழ்க்கை உள போல இல்லாகித் தோன்றாக் கெடும்

 என்பதாவது ....?????

சார் யுவர் ஹைனெஸ் லார்டு கிருஷ்ணா !  இதெல்லாம் அப்பறம் பதில் சொல்றேன்.
எங்களுக்கு நல்ல குடி நீர் வேண்டும். 
இன்று குடி இருக்கிறது. நீர் இல்லையே !!

பொறு.

தூங்குக  தூங்கிற்  செயற்பால 
தூங்கற்க தூங்காது செய்யும் வினை

என்பதாவது நினைவு இருக்கிறதா ?

பகவானே ! எனக்கு இதெல்லாம் நினைவு இருக்கிறது இல்லை, இதெல்லாம் இப்ப தேவை இல்லை. எங்களுக்கு குடி நீரை சுத்தப்படுத்த க்ளோரின் டாப்லெட் வேண்டும். லெப்டோ வியாதியிலிருந்து முன் எச்சரிக்கையாக இருக்க டாக்சிசைக்ளின் மாத்திரைகள் வேண்டும். அதை தராமல் இதைப் படித்தாயா, இது நினைவு இருக்கிறதா என்றெல்லாம் சொல்வது நியாயமா !!

அதெல்லாம் உனக்குக் கிடைக்கும். ஆனால் உனக்குத் தெரிந்திருக்கும்.

செய்த வினை ஒன்றிருக்க தெய்வத்தை நொந்தக்கால்
மீண்டு வருமோ இருநிதியும்...

இன்னாயா நானும் கேட்டுகினே இருக்கேன். நீ அது தெரியுமா இது தெரியுமா ன்னு கேட்டுகினே இருக்கே !  அதெல்லாம் தெரியும். எனக்கு இன்னிக்கு இன்னா வேணும் என்பதை இப்போதைக்கு நான் உனக்குச் சொல்லவும் வேண்டுமோ !!


நினைச்சது ஒன்னு, நடந்தது ஒன்னு அதனாலே தவிக்குதே

என்ன கண்ணா பாடுகிறாய் !!

ஆமாம். உன்னிடம் இருக்கும்போதே இருப்பதை கொடு கொடு கொடு என்று பல முறை சொல்லியும் நீ கொடுக்காமல் இருந்து விட்டாய்.  இப்போது எதற்காக தவித்தாயோ அது அதிகமாக வந்துவிட்டதே என்று அவஸ்தை படுகிறாய்.   இருக்கும்போதே கொடு . அதிகமாக சேமிக்காதே.

புரியவில்லை கண்ணா.

இன்னுமா நீ இன்றைய ஹிந்து பேப்பர் படிக்கவில்லை.?
முதல் பக்கத்திலேயே இருக்கிறது. எ ராங் கால் தட் சாங்க் த சிடி என்று.

எனக்கு என்னவோ நடந்தது எல்லாம் டோடல் மிஸ் மேனேஜ்மெண்ட் ஆப் வாடர் ரிசோர்சஸ் என்று தான் தோன்றுகிறது.

கண்ணா எனக்கு அதெல்லாம் இப்ப தேவை இல்ல. எனக்கு இந்த தெருக்குப்பைஎல்லாம் திரட்டி கொண்டு போகவேண்டும். அதற்காக லாரிகளை அனுப்பு. அந்த இடமெல்லாம் ப்ளீசிங் பவுடர் போடவேண்டும். தெருக்களில் மருந்து ஹெவியா அடிக்கவேண்டும்.


நடந்தது, நடப்பது, நடக்கப்போவது எல்லாம் நான் அறிவேன் . என்று சொல்லி கண்ணன் மறைந்து போனார்.